Wednesday, November 9, 2011

ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை பாகம் -2


சமுதாயப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்

இப்படியே தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89,90,91 என்ற மைல் கற்களைத் தாண்டி 92 ஆம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது தான் அந்த நிகழ்வு. பட்டப்பகலில் சங்பரிவார பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான். சமுதாய இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த லீக்குகள் சமுதாயத்தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறிவிட்டன.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்லிம்லீக், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.
இத்தகைய காரணங்களால் முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள். இந்த இயக்கங்கள்  அவரச சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் நாஸர் மஃதனி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.
இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பம் திணிக்கப்பட்டது. சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது.
அதுவரை தவ்ஹீத் என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீத் ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்று முடிவுக்கு சகோதரர் பி.ஜே வந்தார். தானாக வந்தார் ன்று சொல்வதை விட அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி

நாஸர் மஃதனியின் உணர்வுப்பூர்வமான உரையில் மக்கள் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தேட்டமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக்கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்லிம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி (பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி- மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.
ஆனால் நாஸர் மஃதனி அவர்கள் அப்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யதீ, யாரசூலுல்லாஹி என்ற இணைவைப்புக் கவிதைகளுடனே துவங்கும். இதனால் அவரது இயக்கம் தமிழகத்தில் வலுப்பெறுவது தவ்ஹீத பிரச்சாரத்துக்குப் பின்னடைவாக அமையும் என்ற கவலை தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஏற்பட்ட்து.
ஆனால் தவ்ஹீத்வாதிகளுக்கு சிரமம் தராமல் பிடிபியின் முடிவுரையை நாசர் மதனி தானே எழுதினார். சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.

ஜிஹாத் கமிட்டி

கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாஸர் மஃதனி தேவைப்பட்டது போலவே தமிழகத்திற்கு ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.
இவரிடம் பேச்சுத்திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒருவரை எழுப்பி, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்பார். இந்த ஐந்து கலிமாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம் கூட அவருக்கு இருக்கவில்லை.
முன்கர் நகீர் கேள்வி கேட்டால் நான் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்பேன். எனது பேச்சு குற்றம் என்று அல்லாஹ் என்னை நரகில் போட்டால் போடட்டும் என்றெல்லாம் அவரது மேடைப் பேச்சு அமைந்தது.
எனினும் மக்களுக்கு ஒரு தேட்டம் இருந்தது. ஒரு தேவை இருந்தது. அந்த தேட்டத்தையும், தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.
அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.
அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!
இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திலிருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.
சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

சத்தியத்திற்கு ஜாக்; சமுதாயத்திற்கு பி.டி.பி

இந்த வெற்றிடம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக் கூட பி.டி.பி மீது பகிரங்கக் காதல்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழிநடத்தும் உயர் பொறுப்பிலிருந்து கொண்டு, ஷிர்க்கைக் கொள்கையாகக கொண்ட பி.டி.பி தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் வெற்றிடம் என்ற கோளாறு தான்.
தவ்ஹீத் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீத் இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பியில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இது தான் பி.ஜேவை சமுதாயப் பிரச்சனையை நோக்கி கொண்டு சென்றது.
அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு சுழன்றது.  மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.
பழனிபாபா, நாஸர் மஃதனி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந்திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது. அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்கு கொண்டு வந்தது.
சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு

அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி நாடாக்கள் தான். அந்த இடத்தை பி.ஜேயின் ஒலி நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! ஆடியோ,வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.
பி.ஜேயின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.
யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசரநிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த கால கட்டத்தில் பி.ஜே பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேசமாகும்.
சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சனையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பி.ஜே ஆளானார். அதனால் தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.
ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது. இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல்ஜன்னத் தான். அன்று அது மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதில் பி.ஜே தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் வளைத்துப் போட்டது.
சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கை தான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது.
(இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ்  ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

தவ்ஹீத்வாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்னிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம் தான், தடா எதிர்ப்புப் பேரணி! "இம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்படையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.
ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம் அது! அடங்கிப் போன காலம் அது! காவல் துறையின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காட்டு தர்பார் அது!
குரல் கொடுப்பவரின் குரல்வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில் தான் மேலைப்பாளையத்தில் திருக்குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.
சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீத் ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.
நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூரவைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னத் வல்ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணிவகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கக் சொல்லி சிங்கங்களாய் கர்ஜித்தனர். பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது அந்தப் புது அத்தியாயமாகும்.
தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், இந்தத் தாடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.
தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்திவாரமாகவும் அமைந்தது இந்த தடா எதிர்ப்புப் பேரணி தான்.
அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இட ஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம் வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லிம் இயக்கங்களில் தாய்மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!

பொதுசிவில் சட்டம் என்ற புது சதித்திட்டம்

இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண்டிய புது சோதனை உருவெடுத்தது.
பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட பின், உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப்பிரச்சனை பூதகாரமாகக் கிளம்பியது. புயலாகப் புறப்பட்டது. அது தான் பொது சிவில் சட்டம்.
சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங்கியிருக்க வேண்டும்.
பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்யவில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.
அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள், அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. அதிலும் பி.ஜே களமிறங்கினார்.
என்ற கட்டுரை தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
சட்டம் படித்த வழக்கிறஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தைப் பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் சகோதரர் பி.ஜே அளித்திருந்தார்.
எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் பி.ஜே உரை நிகழ்த்தினார். பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி. ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லலிம்களைச் சென்றடைந்தது.
வெளியிடப்பட்ட்து
இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீது தான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசின் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு அது செவிசாய்க்கவில்லை.
இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த்தியதும் தவ்ஹீத் ஜமாஅத் தான். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான இந்தப் போர் முழக்கம், முஸ்லிம்களை தவ்ஹீதின் பக்கம் ஈர்த்தது.
இது போன்ற குழல்கள் தான் நம்மை சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!
ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது. காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம்பித்தன. அப்போது சமுதாயம் மயான அமைதியில் தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீத்வாதிகள் தான் என்ற நிலை ஏற்பட்டது.

ராஜகோபாலன் கொலை

இப்படிப்பட்ட அக்கினிப் பிரவேசத்தின் போது மதுரையில் இந்து முன்னணி தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத் தான் எஸ்.எம்.பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் பி.ஜே யுடன் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.
(அவர் பாலியல் குற்றச்சாட்டுக்காகவும் பண மோசடிக்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தனி விஷயம்)
பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீத்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போது தான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது. இன்று பாக்கர் நாளை பி.ஜே என்று இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?
அப்போது வலிமையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக் தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப் பரீட்சைக்கு வர மாட்டார்கள்.
மதுரை ராஜகோபாலன் கொலையில் ஜாக் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் ஜாக்கில் நிதி வசூலிப்பவராக இருந்த சீன் நெய்னா முகம்மது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்த்தும் பீஜேயைத் தவிர அனைத்து நிர்வாகிகளும் பல மாதங்கள் அல்ஜன்னத் அலுவகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.
உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு அல்ஜன்னத் ஆளாகியிருக்கின்றது  என்று தெரிந்த மாத்திரத்திலேயே பேர்ணாம்பட்டைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார்.
அதில் ஒரு போதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அன்வர் பாய் மட்டுமே!

தமுமுக உதயம்

இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது? இதற்கான ஆலோசனை அல்ஜன்னத் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது.
பின்னர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடந்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர் தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தரவில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அதுதான் தமுமுக.
தமுமுக என்ற பெயரில் பதிவு செய்யப்படாத ஒரு இயக்கத்தை அவர் நடத்தி வந்தார். அதற்கு கொடி கூட இருக்கவில்லை. பீஜே தான் கறுப்பு வெள்ளைக் கொடியை வடிவமைத்தார். இந்த இரண்டு வண்ணங்களையும் தேர்வு செய்யக் காரணத்தையும் விளக்கினார். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு என்பது கருப்பு வெள்ளையின் கருத்தாகும்.
இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக்கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. தமுமுக முதலில் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்தைதக் காணுங்கள்! இப்போதைய பொதுச் செயலாளர் 6 வது இடத்திலும், இப்போதைய தலைவர் 7 வது இடத்திலும் இருப்பதைக் காண்க.
ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தமுமுக பைளாவின் முதல் பக்கம்
தமுமுக துவங்கும் போது ஜவாஹிருல்லாவோ, ஹைதர் அலியோ மக்களால் அறியப்பட்டவர்களாக  இருக்கவில்லை. இவர்களது அழைப்பை ஏற்று வரக்கூடிய ஐம்பது பேர் கூட தமிழகத்தில் இருக்கவில்லை. மக்களை ஈர்க்கக் கூடிய சொல்லாற்றலும் இவர்களிடம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் சமுதாயத்துக்குத் தியாகம் செய்த வரலாறும் இவர்களுக்கு இருக்கவில்லை.
பீ.ஜே  அவர்கள் பதினைந்து ஆண்டுகள் அடி உதைபட்டு கொள்கைச் சகோதரர்களையும், பிரச்சாரகர்களையும் உருவாக்கியிருந்ததால் - அவரே தமுமுகவின்           தூணாகவும், முதல்நிலை தகுதியுடையவராகவும் இருந்தார். நெருக்கடியான காலங்களில் எந்தப் போராட்டத்திலும் அதன் தற்போதைய தலைவர் கலந்து கொண்டதில்லை. பின்வாங்கி விடுவார். இப்போது கருணாநிதியின் சிறுபான்மைப் பிரிவாக ஆன பின்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் துணிவு (?) அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.                
தமுமுக வரலாறை விளக்கும் சி.டியை தமுமுக வெளியிட்டது. அதில் பி.ஜேயை இருட்டடிப்பு செய்து விட்டு தாங்களே தமுமுகவை உருவாக்கியது போல் புளுகியதால் இதைக் குறிப்பிடுகிறோம்.
பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப்போட்டு விடக்கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும். 50 பேர் திரண்டால் காவல் துறையிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தான் பேசும். அந்தப் பேச்சு தான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப்  போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.
இப்பேரணிக்காக தமுமுகவில் இப்போது ஆதாயம் அடைந்து வருபவர்கள் ஒரு துரும்பை எடுத்துப் போடக் கூட இயலாதவர்களாக இருந்தனர். காரைக்கால் அப்துல் ரஜாக் என்பவரை பி.ஜே தனது பிரதிநிதியாக தமிழகமெங்கும் அனுப்பி தவ்ஹீத்வாதிகளைத் திரட்டியதால் தான் அப்பேரணி சாத்தியமானது.
அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை மன்றோ சிலைக்கருகில் திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்னலில் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச் செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.
இது தான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம் போல் குவிந்தனர். தவ்ஹீத் மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.
குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது.                     
இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப் போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீத் அமைப்பு தான் இருந்தது. அந்த தவ்ஹீத் மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டு தான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
காவல் துறையின் அடுத்தக்கட்ட சுழி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் பி.ஜேவை நோக்கித் தானே என்ற கவலை தான் அந்த தவ்ஹீத் மக்களை இயக்கியது. அது தான் அவர்களை அங்கு வந்து குவித்தது.
பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து முடித்த பின்னர் சில மாத இடைவெளியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்காலில் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி பார்சல் குண்டு வழக்கில் கைது  செய்யப்பட்டார்.

முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பி.ஜே தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.
ரிபாயீயைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், நாகூர் காவல்துறை அதிகாரி இந்திரஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வர மாட்டார்கள் என்று பி.ஜே வலியுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்படவில்லை.
எனது தலைமையில் உள்ள மக்களை ஹனீபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டதும் அவரது மதரஸாவில் பணியாற்றிய ஆசிரியர் கைது செய்யப்பட்டதும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவேயில்லை.
நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டடால், பி.ஜே என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சம் திரளுவார்கள் என்று பீஜே எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகி விடும் என்று அவர் அஞ்சியதால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக நாம் வெளியிட்டோம்.
கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போது தான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதிலிருந்தும் தெளிவாகும்.
உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல் துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம், ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு  எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வலிமையாக எடுத்துக் காட்டினோம்.
(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்க அடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிலிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவிவிட்டோம்.)
தவ்ஹீத்வாதிகளின் தலைமையாக இருந்த ஜாக்குக்கும் தமுமுகவுக்கும் பிரச்சனைகள் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்று தமுமுக நிர்வாகிகள் முடிவு செய்து இது குறித்து கமாலுத்தீன் மதனியிடம் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஏனெனில் அப்போது தமுமுகவுக்கு என தனியாக எந்த ஆள் பலமும் இல்லாமல் இருந்த்து. அதனடைப்படையில் பீஜெ சென்னை புதுப்பேட்டைக்கு வந்திருந்த கமாலுத்தீன் மதனியை சந்தித்து தமுமுகவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். இரண்டு தலமை வேண்டாம் என்று நீங்கள் கருதினால் இரண்டுக்கும் நீங்களே தலைமை ஏற்பதற்கு தமுமுக நிர்வாகிகள் உடன்படுகிறார்கள் என்று எவ்வளவோ பீஜே எடுத்துச் சொன்னார். ஆனால் கொள்கயற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று கமாலுத்தீன் மறுத்து விட்டார். மேலும் இந்த தமுமுக ஒரு காலத்தில் தவ்ஹீதை ஒழிக்க பாடுபடும் எனவும் கமாலுத்தின் மதனி சொன்னார். அதற்கு பீஜே அப்படி ஒரு நிலை வந்தால் நான் தமுமுகவை தூக்கி எறிந்து விட்டு தவ்ஹீதின் பக்கம் நிற்பேன் எனக் கூறி விட்டு பீஜே வெளியேறினார்.
அந்த நிலை வந்த போது பீஜெ சொன்ன படி தமுமுகவை கை கழுவினார், ஆனால் அந்த நிலை வந்த பின்னர் கமாலுத்தீன் மதனி தமுமுகவுடன் ஒட்டிக் கொண்டார்.
இதன் பின்னர் தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.
இயக்கம் வளர்ந்து விட்ட பின் இனிமேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுகவுக்கு ஒரு மரியாதை ஏற்றப்பட்ட பின் பி.ஜே அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள்; இந்த இயக்கத்தை கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை. இனி மேல் நான் இல்லாவிட்டாலும் சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பீஜே பொறுப்பிலிருந்து விலகினார்.
மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல்நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜேயை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.
ஆனால் பீ.ஜே முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகு தான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.
பீ.ஜே பொறுப்பிலிருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள் தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து, தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.
தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அனுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சனைக்குரியவற்றை விட்டு விலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.
பொறுப்பில் இருந்து பீ.ஜே விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதே சமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலை போவதைக் கவனித்துக் கவலைப்பட்டார். இந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.
ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவி வெறியைக் கண்டு புளுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டுமிட்டு நகர்த்தி வந்தது.

ஜாக் தமுமுக உரசலும் விரிசலும்

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்த தயக்கத்தை பி.ஜே நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால் தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகினார்.
(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமை கூட இல்லாமல் பறிக்கப்பட்டது.)
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை, மறைமுகமாக அனுமதி தந்தால் போதும் , அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் "அமீர்' சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)
பி.ஜே உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு மன்றாட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்த்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!
ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர்கோவிலில் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.
இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிலிருந்து பி.ஜே எடுத்து வைத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்லி விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுகவை விமர்சிக்கலானார்.
கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந்தோம்.
(சைபுல்லாஹ் ஹாஜாவும் நம்பிக்கை துரோகம் செய்து அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது பற்றி அறிய
ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமலேயே நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பி.ஜே திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித் தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்ல!  விரிசல் ஏற்பட்டது.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons